ஐம்பது ஆண்டுகளின் பின்

ஐம்பது ஆண்டுகளின் பின்.....



ஐம்பது ஆண்டுகளின் பின்
குடும்பம் சகிதம்
ஒரு குட்டி சுற்றுலா
கிழக்கிலங்கை நோக்கி
சுற்றிப்போக வந்த நேரம்
அரும்பியது ஓர் ஆசை

நான் சிறகடித்த
இளமைக்காலம்
இன்பதுன்பம்
நட்பு காதல் தந்த
பசுமைக்காலத்தை
அந்த பல்கலைக்கழகத்தை
பார்த்து வர ஆசை

வந்து சேர்ந்தோம் வளவுக்குள்
நினைவு சென்றது பின்னுக்கு
பேரப்பிள்ளையின் விரல் பற்றி
மெல்ல மெல்ல நடந்து செல்கிறேன்

காலச்சக்கரம் பூமியையும்
கொறித்துக் கொள்கிறதோ.. தோற்றம் முற்றிலும் மாறிய
இலங்கைக்கு எடுத்துக்காட்டு
இதோ இந்த பல்கலை தானோ

நாம் படிக்கையில் தொடங்கிய
தொழிநுட்ப பீடத்தை கடல்
விழுங்கிக் கொண்டதோ..
அதோ அங்கு தானே
அடிக்கடி சீக்கு வர
ஆட்டோவில் போயிறங்கும்
ஆரோக்கிய நிலையமிருந்தது

ஆஹ் அங்கே இருந்த
ஆண்கள் விடுதி எங்கே
அய்யோ இங்கு தானே
நாம் அடிக்கடி காலம் கழித்த
எனக்கு மிகவும் பிடித்த
ஆடல் பாடல் கராத்தே என
களைகட்டும்
பயிற்சி பட்டறை இருந்தது..

எங்கே அவை
 நீர் மயமான
வெறுமையே எங்கும்
ஆக்ரோஷத்துடன்
பாய்ந்து வந்த கடலலைகள்
கலை பீடத்தின் எச்சங்களில்
முட்டி மோதிச் செல்கிறது..

முட்டி நின்ற கண்ணீர் துளிகள்
உடைந்து சிதற
கடலோர அணை கற்கள்
எல்லாம் என் நெஞ்சினிலே
குவித்தது போன்ற
கனத்தோடு திரும்புகிறேன்..

புதிய கலைப்பீடத்தையும்
தொழிநுட்ப பீடத்தையும் நோக்கி
மாணவர்கள் விரைகின்றனர்.
இன்னும் சற்று தொலைவில்
பிரதான வீதியருகே
ஏனைய பீடங்களுக்கான
கட்டுமானப்பணிகள்
இப்போதே ஆரம்பித்து விட்டார்கள்.....
2018/11/31
புத்தளக்கவி
     நிஸ்னி

Comments

Popular posts from this blog

வீழ்வேனென்று நினைத்தாயோ

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்